படிச்சிட்டீங்களா? அப்ப நம்ம தொடருவோம்.
மேட்டுப்பாளையத்தில் இறங்கின உடனே பெரும் அதிர்ச்சின்னு சொன்னேனே.. என்ன தெரியுமா... அந்த ஜோடி இறங்கின உடனே ஒருத்தரை ஒருத்தர் பாத்து சிரிச்சாங்க.... அப்புறம் அந்த பையன் அங்க காத்துகிட்டு இருந்த இன்னோரு பொண்ணோடயும், அந்த பொண்ணு இன்னோரு பையனோடயும் கிளம்பி போயிட்டாங்க..........ன்னு சொன்னா கதைக்கு சூப்பராத்தான் இருக்கும். ஆனா அப்படி ஏதும் நடக்கலையே...அவங்க ரெண்டு பேரும் எங்களுக்கு முன்னாடியே இறங்கிப் போயிட்டாங்க. அதுனால என்ன நடந்துச்சுன்னு நான் பார்க்கலை....
அப்புறம் என்ன அதிர்ச்சின்னு கேக்குறீங்களா??? அதுக்கு கொஞ்சம் முன்கதை விளக்கம் சொல்லணும். நானும் சரி, தங்கமணியும் சரி ஊட்டிக்கு போறது இதுதான் முதல்முறை. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு எப்படி போறதுன்னு தெரியாது. நாலு படிச்சவங்ககிட்ட கேட்டதில மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி மலை ரயில் வழியாவோ இல்லைன்னா பேருந்து புடிச்சு போயிடலாமுன்னு சொன்னாங்க....
சரி ஏதோ படிச்சவங்க சொல்லுறாங்க கேட்டுகிடுவோமுன்னு நினைச்சு வந்தேன். அவங்க கொடுத்த பில்டப்பு பாத்து மேட்டுப்பாளையம் ஸ்டேஷன் ரொம்ப பெரிசா இருக்குமுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.
ஆனா மே.பா.-வில் இறங்கி பார்த்தா.... ஒர்ரே ஒரு ப்ளாட்பார்ம் அதுதான் ஸ்டேஷன். அதுதான் ரொம்ப அதிர்ச்சியாயிடுச்சு.
அப்புறம் அங்க இருந்த உணவகத்தில் ஒரு காபியைக் குடிச்சுட்டு இருக்கும் போது ஊட்டி மலை ரயில் புகை விட்டுக்கிட்டே வந்துச்சு. பார்க்க சூப்பரா இருந்துச்சு. சரி அதுலயே போயிறலாமுன்னு டிக்கெட் எடுக்கலாமுன்னு பார்த்தா அதுக்கு ஒரு பெரிய வரிசை நின்னுட்டு இருந்துச்சு. ஆத்தாடி இதுல நின்னு டிக்கெட் எடுக்கறதுக்குள்ள வண்டியே போயிரும் போலருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கும்போது அங்க இருந்த இன்னொரு படிச்சவர் சொன்னாரு... இந்த வண்டி ஊட்டி போயிச் சேர 5 மணி நேரம் ஆகும். மழை வந்து பாதையில் ஏதாவது பிரச்சனை வந்தா இன்னும் கூட தாமதமாகுமுன்னு சொன்னாரு. ஆஹா நம்ம 3 வயசு வாண்டுவை வச்சுகிட்டு இதுல போறதுக்கு தோதுப்படாதுன்னு தங்கமணி அன்பா சொல்லிட்டாங்க...
தங்கமணி அன்பா சொன்னதுக்கு அப்பீல் உண்டா? உடனே சரின்னு சொல்லிட்டேன். ஆனா அடுத்தமுறை ஊட்டி வரும்போது கண்டிப்பா மலை ரயில்ல தான் போகணுமுன்னு சொல்லிட்டேன். உங்களுக்கு மலை ரயிலப் பத்தி தெரிஞ்சுக்கணுமுன்னா இங்க போயி பாருங்கப்பு
சரி பேருந்துநிலையத்துக்கு எப்படி போறதுன்னு அதே படிச்சவரைக் கேட்டா அவரு ரயில தாண்டி போகணுமுன்னு சொன்னாரு.. .ஆஹா ரயிலை எப்படிடா தாண்டுறதுன்னு யோசிச்சு (பழைய ஜோக்கு...சரி சரி.........) அப்புறம்தான் அந்த நடை மேம்பாலத்தை (அடடா......தமிழ்...தமிழ்........) பார்த்தேன். அதில் ஏறப்போகும் போதே ஒரு நாலு அஞ்சு பேரு "சார் சார் டாக்ஸி வேணுமான்னு கேட்டாங்க"... அட ஊட்டிக்கு போக இப்படி ஒரு வழியிருக்கே... பேருந்துல போக வேணாமேன்னு நினைச்சேன். ஆனா தங்கமணி moneyயை காரணம் காட்டி வேணாமுன்னு சொல்லுவாங்களேன்னு நினைச்சப்போ......தங்கமணியே மிக மிக அன்பா... "குழந்தையையும்... பயணச்சாமான்களையும் வெச்சுக்கிட்டு பேருந்துல போறது ரொம்ப கஷ்டமாயிருக்குமுன்னு நினைக்கிறேன். நம்ம டாக்ஸியில போயிறலாமா"-ன்னு கேட்டாங்க... ஆஹான்னு உடனே சரின்னு சொல்லியாச்சு.
சரின்னு ஒரு டிரைவர் கிட்டே பேரம் பேசி முடிச்சு அவரு வண்டியிலயே போயிறலாமுன்னு ஏறியாச்சு..
இங்க இந்த டிரைவரைப் பற்றி சொல்லணும். உண்மையிலேயே இவர் கிடைத்தது எங்க அதிர்ஷ்டமுன்னுதான் சொல்லணும். நியாயமான வாடகை. நல்ல உபசரிப்பு...அழகான கொங்குத் தமிழ்....நிறைய உதவி... இப்படி ஒரு டிரைவரைப் பார்ப்பது அபூர்வம்... அவரு பேரு சரவணக்குமார். நீங்க ஊட்டி போனீங்கன்னா நம்பி அவரு வண்டியில ஏறலாம். மேலும் தொடர்பு கொள்ளும் விவரங்களுக்கு எனக்கு ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்க.....
குன்னூரு வழியா சரவணன் எங்களை ஊட்டிக்கு கூட்டிப்போனாரு. போற வழியில் நிறைய இடங்களில் நிறுத்தி அதைப் பத்தி விளக்கினாரு......அவரே இருக்குப்போற மூணு நாளையும் என்ன என்ன இடத்துக்கு போகலாமுன்னு சொன்னாரு. எங்க முதலில் எங்க இரண்டாவ்துன்னு அவரே ஒரு திட்டமும் சொன்னாரு. நான் விருப்பப்பட்டா அவரே எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போறதா சொன்னாரு. வாடகை விவரமும் சொன்னாரு. ஆனா நான் ஏற்கனவே தங்குமிடத்தில் சொல்லி வைத்திருந்தேன். உடனே தங்குமிடப் பொறுப்பாளருக்கு தொலைபேசி... பயண திட்டத்தை சொல்லி, அதுக்கு வண்டி வாடகை விவரம் கேட்டேன். ஆனா அவரு சொன்னது ரொம்ப ரொம்ப அதிகமா இருந்தது. அதனால சரவணன் வண்டியே எடுத்துக்கலாமுன்னு முடிவு செஞ்சு சரவணன்கிட்டே ஓ.கே சொல்லியாச்சு.
நான் வேலை செய்யும் கம்பெனியின் விருந்தினர் மாளிகையில் தான் தங்குவதுக்கு ஏற்பாடு செஞ்சு வெச்சிருந்தேன். சரவணன் 8:30 மணிக்கு அங்கே கொண்டு போய் சேத்துட்டாரு...அவரு சொன்ன திட்டத்தின்படி, அன்னிக்கே தொட்டபெட்டாவும், கொடநாடும் (ஆமா ஆமா அதே கொடநாடுதான்...) போகணும். சரின்னு விருந்தினர் மாளிகையிலுள்ள சமையல்காரரை காலை உணவு தயாரிக்க சொல்லிவிட்டு நாங்கள் அறைக்கு சென்று குளித்து முடித்து உணவுக்காக காத்துக் கொண்டிருந்தோம்..
உணவு தயாரானதும் வந்து சாப்பிடும்போது...பொறுப்பாளர் விக்ரம் இரவு உணவு தேவையான்னு கேட்டாரு. என்னாடா இப்போவே கேக்குறாங்கன்னு விசாரிச்சா... இரவு உணவு, அடுத்த நாள் பகல் உணவு எல்லாம் வேணுமான்னு முதநாளே சொல்லிடணுமாம். ஏன்னா இந்த இடம் ஊருக்கு வெளியே இருக்கு. நாம சொல்லுறது வெச்சுத்தான் அவங்க போய் பொருட்கள் வாங்கிட்டு வந்து உணவு தயாரிக்கணும். சக ஊழியர்கள் இங்கு கிடைக்கும் உணவு பற்றி ரொம்ப புகழ்ந்து சொல்லியிருந்ததால உணவு வேணுமுன்னு சொல்லியாச்சு
சரவணனும் சொன்னா மாதிரி வந்துட்டாரு. இனிமே என்னா... நேரா தொட்டபெட்டாதான்.....
அடுத்த பகுதியில போயிரலாம்.
இப்போ நாங்க தங்கிய விருந்தினர் மாளிகையையும், அதைச் சுற்றி இருந்த இடங்களையும் எனது மூன்றாவது கண்ணால் சுட்டதை பாருங்க......

இங்கே இருக்கும் ரெண்டு வித்யாசமான செடியை அங்குதான் முதலில் பார்த்தேன். இலைகளே பூக்கள் வடிவில் சூப்பரா இருந்துச்சு...

இது இன்னொன்னு

அங்கிருந்த மேலும் சில பூக்கள்



(தொடரும்............)