Tuesday, June 26, 2007

எட்டி 8டி பார்க்கிறேன்..எட்டுக்குள் நான்

எட்டுக்குள்ள நானும் இருக்கேன்....

அழைத்த சிவாக்கு நன்றி. என்னையும் ஒரு ஆளா மதிச்சு நீங்க கூப்பிட்டுருக்கறத நெனைச்சா புல்லரிக்குது.

ஆனா என்னைப் பத்தி பெருமையா சொல்லிக்கிற மாதிரி எட்டு விஷயம் எழுதறது எவ்வளவு கஷ்டமுன்னு எழுத தொடங்கியதும்தான் தெரியுது.
நம்மள பத்தி சொல்லிக்கிற மாதிரி எட்டு விஷயம் திரட்ட இன்னும் எட்டு வருஷம் ஆகும் போலிருக்கு... அப்புறம் மத்தவங்க எட்டு போட்டதை பார்த்து, சரி பெருமையான விஷயம்னு இல்லாம நம்மளை பத்தி எட்டு விஷயம் சொன்னாப் போதுமுன்னு நினைச்சு இந்த பதிவை எழுதுறேன். இதுக்கு முன்னாடி நான் இந்த மாதிரி சங்கிலி தொடர் விளையாட்டில் பங்கேற்றதில்லை. அதுனால, பதிவில் பிழையிருந்த நீங்க கொஞ்சம் கண்டுகிறாதீங்க... திரனா திரனா தன தன்னானே..... ஆஹா பாத்தீங்களா பதிவு எழுதிட்டிருக்கும்போதே பருத்தி வீரன் பாட்டுக்கு தாவிட்டேன். இதுதாங்க என்னைப் பத்தின முதல் விஷயம்.

இசையில்லாமல் நானில்லை. அது இதுன்னு குறிப்பிட்டு இல்லாம எல்லா விதமான இசையும் கேட்பேன். நான் என்ன வேலை செஞ்சுகிட்டு இருந்தாலும் பக்கத்தில இசை ஒலிச்சுக்கிட்டே இருக்கணும். இல்லாட்டி எனக்கு என்னவோ கையில்லாதது போல இருக்கும். கொஞ்சம் சுமாரா நல்லாவே பாடுவேன். பள்ளி நாட்களில் இருந்து தொடங்கி, கல்லூரி நாட்களிலும் பல விதமான பாட்டு போட்டிகளிலும் பங்கேற்று, எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு பரிசு கண்டிப்பா வாங்கிடுவேன். பின்னர் முதுகலை படிக்கும் போது கர்நாடக சங்கீதத்தின் மீது பயங்கர ஆர்வம் வந்து அதை முறைப்படி கற்றுக் கொண்டேன். இப்போ ஓரளவுக்கு கர்நாடக சங்கீதமும் தெரியும். ஆணி பிடுங்க தொடங்கியதில் இருந்து, கற்றுக் கொள்வது தடை பட்டாலும், இசை ஆர்வம் இன்னும் குறையவில்லை. என் மகனுக்கும் இசை ஆர்வம் இருக்கும் போல் தெரிகிறது சந்தோஷமா இருக்கு.

அடுத்தது படிக்கும் ஆர்வம். எப்போ பார்த்தாலும் ஏதாவது படிச்சுகிட்டே இருப்பேன். சாப்பிடும் போதும் கூட. ஆங்கில தமிழ் நாவல்கள் எல்லாம் படிப்பேன். குமுதம், விகடன் எல்லாம் படிப்பேன். அனேகமாக எல்லா வாரப் பத்திரிக்கைகளும் எங்கள் வீட்டில் இருக்கும். எல்லாவற்றையும் படிப்பேன். படிக்க புதிதாக எதுவும் இல்லைன்னா ஏற்கனவே படிச்ச புத்தகம் ஏதாவது எடுத்து மறுபடி படிப்பேன். (இது weird list-ல் இருக்கணுமோ?) மாசம் கணிசமான தொகை புத்தகங்களுக்குனே ஒதுக்கி வெச்சுடுவேன்.

இப்போ எழுத்தில் ஆர்வம் ஏற்பட்டிருக்கு. அதுதான் இந்த பதிவு எல்லாம். என் பதிவுகளை படிச்சுட்டு துளசி டீச்சர் நல்லா எழுத வந்திருச்சுன்னு சொன்னதை கண்டிப்பா பெருமையா நினைக்கிறேன். (அவங்க சும்மா ஒரு ஆறுதலுக்கு சொல்லியிருந்தாலும்.......). அதுமட்டும் இல்லாம என் பதிவுகளை தொடர்ந்து படித்து என்னை உற்சாகப் படுத்தும் என் நண்பர்கள், குறிப்பா சீதா. இவங்களால்தான் நான் இன்னும் தொடர்ந்து பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன். ( இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவங்க பாராட்டியிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்)

இது மட்டும் இல்லாமல் நான் வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில் நான் எழுதிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை (on unified Messaging) பாராட்டப் பட்டு மிகச்சிறந்ததாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. அது சிங்கப்பூர் அரசாங்க நிறுவனத்துக்காக தயாரிக்கப் பட்டதால், சிங்கப்பூர் அரசாங்கமும் பாராட்டு சான்றிதழ் வழங்கி, அது நாளிதழிலும் வெளியானது.

கல்லூரியில் இளங்கலை படிக்கும்போது ஒரு கலைக்குழு துவக்கியது. அந்த ஊரில் ஆணும் பெண்ணும் பேசுவதே அபூர்வமாக இருந்த நேரத்தில், மாணவிகளை மிகுந்த சிரமப்பட்டு கலைக்குழுவில் சேர்த்து, பல பல்கலைக்கழக போட்டிகளுக்கும் கல்லூரியின் சார்பில் எங்கள் கலைக்குழு சென்று வெற்றிகள் பெற்றது. கலைக்குழு துவங்கியபோது, அதை "கடலை"க்குழு என்று கேலி செய்தவர்கள் பலர். ஆனால் அவர்களே பின்னால் அதற்காக வருத்தம் தெரிவித்தது.

எனக்கு நியாயம் என்று பட்டதை தயங்காமல் எல்லா இடத்திலும் சொல்லுவேன். இது எனக்கு பல இடைஞ்சல்களைத் தந்தாலும் இன்று வரை நான் இதிலிருந்து மாறவில்லை. இதையும் பெருமையாக நினைக்கிறேன்.

என்னைப் பற்றி யாராவது தவறாகப் புரிந்து கொண்டால், கண்டிப்பாக அவருக்கு நான் என் தரப்பு நியாயத்த்தை விளக்குவேன். அவர் தரப்பு நியாயத்தையும் புரிந்து கொள்ள முயற்சிப்பேன். இதனால் பெரும்பாலும் பிரச்சனைகள் சுலபமாக தீர்ந்துவிடும். இதனால் பணியிடத்திலும் சரி, நண்பர்கள் வட்டத்திலும் அவர்கள் பிரச்சனையை என்னால் தீர்த்துவைக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது.

இது தவிர நான் எப்போதும் நினைத்து பெருமைப் படும் எனது நண்பர்கள், குடும்பம். இந்த இரண்டு விஷயத்திலும் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.

அப்பாடி ஒருவழியா என்னைப் பத்தி 8 விஷ்யம் சொல்லிட்டேன். இப்போ நான் அழைக்கும் எட்டு பேர். (எட்டு ரொம்ப அதிகம்)

1. துளசி டீச்சர்.
2. குமரன்
3. ஜெஸிலா
4. மோகன் தாஸ்
5. தம்பி
6. அபி அப்பா
7. கொங்கு ராசா
8. வெட்டி

விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

Tuesday, June 12, 2007

அர்ஜுனன் தவம்

பல்லவர் பூமி -3

ஐந்து ரதங்கள் பார்த்து விட்டு அங்கிருந்து அர்ஜுனன் தவம் பார்க்க போனாம்.. ஒரு குன்றுக்கு பக்கத்தில இறக்கிவிட்டு மேல ஏற சொல்லிட்டாங்க.... நண்பகல் உச்சி வெயில் 12 மணிக்கு ஏறணுமுன்னு நினைக்கும் போதே சோம்பலாயிடுச்சு. இருந்தாலும் கூட வந்த வெளிநாட்டு அண்ணாத்தே பாக்கணுமுன்னு சொன்னதால, ஏற வேண்டியதாப் போச்சு......

மேலே ஏறும் பாதையை படத்தில் பாருங்க..... மரங்களுக்கு நடுவில் தெரிவது தான் பல்லவர் காலத்தின் கலங்கரை விளக்கம்.
மேல ஏறும் பாதையில் மகிஷாசுர மர்தினி சிற்பங்கள் இருக்கு... அதுக்கு மேல பல்லவர் காலத்தில் கட்டின கலங்கரை விளக்கமும், பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் கட்டின கலங்கரை விளக்கமும் இருந்தது... படத்தை பாருங்க.....




இதுதான் மகிஷாசுர மர்தினி சிற்பங்கள் இருக்கும் இடம்












இதுதான் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம்.... வெயில் அதிகம் இருந்ததால மேலே ஏறவில்லை.










இது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம். ஆனால் இப்போ இதுவும் உபயோகத்தில் இல்லை.







இதைத் தாண்டி கீழே இறங்கும் வழி முழுவதும் சிற்பங்கள் நிறைய இருக்கு. ஒரு குன்று முழுவதும் சிற்பங்கள் செதுக்கி இருக்காங்கன்னா அந்த காலத்தில் சிற்பக்கலை எவ்வளவு சிறந்து விளங்கியிருக்க வேண்டும்... நினைச்சு பார்க்கவே ஆச்சரியமா இருக்கு... இப்பவும் கூட மாமல்லபுரத்தில் உளி சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு.....

இதைப் பற்றி பேசிக்கிட்டே கீழே இறங்கினோம்.. அங்க ராயர் மண்டபம் இருக்கு. அதைப் பற்றி கேட்டால் மக்கள் உடனே சொல்லுவது தளபதி பற்றிதான்..... பல்லவர் காலத்து தளபதியில்லை........ நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச தளபதி படம்....... இங்கதான் ராக்கம்மா கையத்தட்டு பாட்டு எடுத்தாங்களாம்.... ஆஹா என்ன ஒரு சரித்திரப் புகழ் பெற்ற தலம்......................ராயர் பற்றி கேட்டா ரஜினி பத்தி சொல்லுறாங்க....என்னத்த சொல்ல....








பின்னர் கீழே கிருஷ்ணனின் வெண்ணை பந்து இருக்கு.... ஒரு பெரிய உருண்டையான பாறை... இன்னோரு பாறை மேல் எந்த பிடிப்பும் இல்லாம இருக்கு.... இதைத் தான் கிருஷ்ணரின் வெண்ணை உருண்டைன்னு சொல்லுறாங்க....



சரி அர்ஜுனன் தவமுன்னு சொன்னாங்களே அதைக் காணோமேன்னு கேட்டா வண்டி நிறுத்திய இடத்துக்கிட்டயே இருக்குன்னு சொன்னாங்க... வெளில வந்து பார்த்தா உண்மையிலேயே மலைச்சு போயிட்டேன்......அந்த பாறையின் பக்கம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கிருக்காங்க...... படங்களைப் பாருங்க...






இதுல அர்ஜுனனை தேடி இந்த படத்தில் தலைக்கு மேல் கையை வெச்சு தவம் பண்ணுபவர்தான் அர்ஜுனன்னு நினைச்சேன்....














அவர் இல்லை இந்த படத்தில் தவக்கோலத்தில் இருப்பவர்தான்னு சொன்னாங்க..... சரியான்னு தெரியலை... தெரிஞ்சவங்க சொல்லுங்க.....









(தொடரும்)

பல்லவர் பூமி - 1. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்கள்
பல்லவர் பூமி-2 ஐந்து ரதங்கள்