Showing posts with label சொந்தக்கதை. Show all posts
Showing posts with label சொந்தக்கதை. Show all posts

Thursday, July 24, 2008

ஊட்டி மலைச் சாரலிலே.....

"சார் மேட்டுப்பாளையம்......" ரயில்வே ஊழியர் வந்து எழுப்பும்போது மணி பார்த்தேன்.... காலை 5:45...என்னங்க.... 45 நிமிடம் முன்னாடி கோயமுத்தூர்ல கேட்டபோது இன்னும் ஒரு மணி நேரமாகும்முன்னு சொன்னீங்களேன்னு கேட்டா.... சிரிச்சுகிட்டே டிரைவர் வேகமா ஓட்டிட்டு வந்துட்டார் சார்-ன்னு சொல்லுறார்..... எல்லாம் நேரம்.....


முதல்நாள் இரவு சென்னை சென்ட்ரலில் வண்டி கிளம்பினதே அரை மணி நேரம் தாமதம்....3ம் வகுப்பு ஏசியில் எங்க சீட் இருந்த ஜன்னலில் இருந்த கண்ணாடி மட்டும் கருப்பா வெளியில் இருப்பது எதுவுமே தெரியாத மாதிரி இருந்தது. என் மகனுக்கு ரயில் ரொம்ப பிடிக்கும்... கண்ணாடி வழியா எதுவுமே தெரியாததனால ஒரே அழுகை...அப்புறம் ராத்திரியானதுனாலதான் எதுவுமே தெரியலைன்னு சொல்லி சமாளிச்சேன்... ஒரு மில்கிபார்கூட அழுகையை நிறுத்த உதவியது.....


என் இருக்கைக்கு பக்கத்தில் இருந்த side berth-ல் (இதுக்கு தமிழில் என்ன??) ஒரு ஜோடி வந்து உட்கார்ந்தது.... ரெண்டு பேரும் RAC. TTR இந்த ஒரு இடத்தை குடுத்துட்டு போயிட்டார்... ரொம்ப நேரம் ஒரே பேச்சும் சிரிப்புமா இருந்தது. இதை பார்த்துக்கிட்டு இருந்தபோது ஒரு இடி.. வேற யாரு தங்கமணிதான்....என்ன வேடிக்கை வேண்டிகிடக்கு... பையன் தூங்கணும் லைட்டை அணைச்சுட்டு படுங்கன்னு ரொம்ப அன்பா சொன்னாங்க.... இல்லை இந்த பக்கம் கண்ணாடி சரியா தெரியலையில்ல அதுதான் அந்தப் பக்க கண்ணாடியப் பார்த்துக்கிட்டு இருந்தேன்ன்னு சொன்னேன்.. வழக்கம்போல தங்கமணி அதை நம்பினா மாதிரி தெரியலை... சரி அதுக்கு மேல தங்கமணிய பொங்க விட வேணாமுன்னு அந்த ஜோடிகிட்ட சொல்லி லைட்டை அணைச்சுட்டு படுத்தாச்சு..


ஆனா அங்க பேச்சு ஓயவேயில்லை.... மெதுவான குரலில் ஏதோ பேசிட்டே இருந்தது அந்த ஜோடி.... கிளு கிளுன்னு சிரிப்பு வேற...சரின்னு நான் ipod எடுத்து பாட்டு கேட்க தொடங்கிட்டேன்....அப்படியே தூங்கியாச்சு.....


ஏதோ ஒரு ஊரில் வண்டி நின்னவுடன் முழிப்பு வந்தது.. வண்டி அங்கிருந்து கிளம்பினவுடனே... பார்த்தா.. ஜோடில பொண்ணு மட்டும் படுத்து தூங்கிட்டு இருந்தது.,.. பையனக் காணோம். அப்புறம் தான் பார்த்தேன், அந்த பையன் வெளியில் நின்னு புகை விட்டுகிட்டிருந்தான்... சரி நமக்கெதுக்குன்னு வந்த வேலைய பார்த்துட்டு திரும்பி வந்து படுத்தா... கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கசமுசன்னு ஒரே சத்தம்... படுத்தபடியே என்னன்னு காது குடுத்து கேட்டா (no no never....ஒட்டுக்கேக்கலை....) பொண்ணுக்கு பையன் தம்மடிச்சது தெரிஞ்சு போச்சு... எப்படி என்கிட்ட நிறுத்துறேன்னு சத்தியம் பண்ணிட்டு எனக்கு தெரியாம தம்மடிச்சன்னு பொண்ணுக்கு கோவம்.. பையன் கெஞ்சறான்... கொஞ்சறான்... அந்த பொண்ணு எதுக்கு மசியலை..எனக்கு ரொம்ப தூக்கம் வந்ததால மறுபடியும் தூங்கிபோயிட்டேன்....


கோயமுத்தூர் வந்தவுடனே ரயில்வே ஊழியர் சார்ட் வச்சு சரிபார்த்து அங்க இறங்க வேண்டியவர்களை எழுப்பினார்.... லைட் எல்லாம் போட்டதால் என் தூக்கம் கெட்டது... கோயமுத்தூரில் வண்டி 30 நிமிடம் நிற்குமுன்னு அவர் சொன்னதுனால வண்டியை விட்டு கீழே இறங்கி நின்னுட்டிருந்தேன்... அங்க ஒரு தள்ளு வண்டி இருந்தது... அதுல உட்கார்ந்து அந்த பையன் மறுபடியும் தம்மடிச்சிட்டு இருந்தான்.. ஆஹா இவன் சரியான கில்லாடியா இருப்பான் போலிருக்கேன்னு நினைச்சேன்..... ஒரு பத்து நிமிடம் ஆன பிறகு அந்த பொண்ணு வந்தது... .sanjay what are you doing here..... ன்னு கேட்டது.. அவன் கூலா சொல்றான் i just came out for a tea honey... the tea is good here would you like to try.............சூப்பரப்பு. சரியான தில்லாலங்கடி....


கோயமுத்தூரில் இருந்து கிளம்பும் போது கேட்டப்போதான் ரயில்வே ஊழியர் மேட்டுப்பாளையம் போக இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமுன்னு சொன்னாரு... அவரை நம்பி மறுபடியும் தூங்கப் போனா 45 நிமிடத்திலேயே எழுப்பி வந்து சேந்தாச்சுன்னு சொல்லுறாரு...


பக்கத்தில் தூங்கிட்டு இருந்த தங்கமணியையும் பையனையும் எழுப்பி, சாமான்களையெல்லாம் எடுத்துக்கிட்டு இறங்கினா... எனக்கு ஒரே அதிர்ச்சி.....

அது என்னான்னு அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

- தொடரும்................



Wednesday, July 16, 2008

மறுபடியும்.....

நான் முதலில் பதிவு எழுதத் தொடங்கியது 2004ம் ஆண்டு நவம்பரில்தான். எனக்கு பதிவுகளின் அறிமுகம் அப்போது தான் கிடைத்தது. ஆனால் அப்போது எழுதுவதை விட படிப்பதில் தான் நாட்டம் அதிகம் இருந்தது. அப்போது தொடங்கி எல்லா பதிவர்களின் பதிவுகளையும் விடாமல் படித்து வந்தேன்....

மறுபடியும் 2007 ஜனவரியில் தான் நானும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் வந்தது....என்ன எழுதுவதென்று தெரியவில்லை. ஏதோ படித்த செய்திகளை வைத்து பதிவுகள் என்ற பெயரில் ஏதோ எழுதி வந்தேன். பின் நான் சென்று வந்த பயணங்களைப் பற்றி எழுதினேன்... தொடர்ந்து 2007 மே மாதம் வரை எழுதி வந்தேன்.

2007 ஜூலை மாதத்தில் சில சொந்த பிரச்சனைகள் காரணமாக எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை. 2007 செப்டம்பரில் புதிய வேலையில் சேர்ந்தேன்... புதிய இடம், புதிய சூழல், வேலைப் பளுவும் பொறுப்புகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழ்நிலை...அப்போது தொடங்கி பதிவுகள் படிக்ககூட என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை....

மறுபடியும்....இப்போது எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நண்பர்களின் வற்புறுத்தல்தான். என்னால் முடிந்த அளவு நேரம் ஒதுக்கி பதிவிட முயற்சிப்பேன்.....

மறுபடியும், "மறுபடியும்...." என்ற பதிவு எழுதாமல் இருக்க முயற்சிக்கிறேன்.


disc : மேலே இருக்கும் படம் நான் எடுத்ததுதான். ஊட்டியில். இதனால் என்ன தெரியுது? நான் அடுத்ததா ஊட்டி பயணத்தைதான் எழுதப்போறேன்.....