Tuesday, April 17, 2007

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - ம.ம.கோவில்கள் -3

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டமுன்னு பாட்டு இருக்கு.


ஆமாம் நான் போனபோது நிஜமாகவே குமரனுக்கு கொண்டாட்டம் தான். அன்று திருத்தேர்.


கூட்டம் ஜாஸ்தியா இருக்குமேன்னு பயந்துகிட்டே போனோம். ஆனால் அப்புறம்தான் தெரிஞ்சது, தேர் காலையிலே. நான் போனது மாலை.
தேர் நல்லபடியா நிலை சேர்ந்திருந்தது. தேர் ரொம்ப் புதுசா இருந்தது. புது தேரான்னு தெரியலை. நீங்களே பார்த்து சொல்லுங்க. தேரில் ராஜா மாதிரி கம்பீரமா வீற்றிருந்த குமரனை காண கண்கோடி வேண்டும்.


கோவில் ஒரு குடைவரைக் கோவில். அந்த பெரிய குன்றை குடைஞ்சு கட்டீருக்காங்க..கோவில் பல நிலைகளா இருக்கு. கோவில் உள்ள நுழைஞ்சதும் வழக்கம் போல கடைகள் அப்புறம் விநாயகர் காளி சிலைகள் இருக்கு. அதைத் தாண்டி அடுத்த நிலைக்கு போனா.. அது பார்க்கிங் ஏரியா (parking area). ஆமாம் அங்க கல்லிலே செதுக்கப்பட்ட நந்தி, மயில், மூஞ்சூறு மூன்றும் ஒரே இடத்தில் இருக்கு.

இது வேறு எந்த முருகன் கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பம்சம். முருகனோட வாகனம் மயில் இருக்கு. விநாயகரோட வாகனம் மூஞ்சூறும், சிவனோட வாகனம் நந்தியும் இருக்கு. முருகனோட கல்யாணத்துக்கு இவங்க ரெண்டு பேரும் தங்களோட வாகனங்களில் வந்திருக்காங்க.. உள்ளே இவங்களுக்கு தனி சன்னதி இருக்கு. தங்களோட வாகனங்களை பார்க்கிங் ஏரியாவிலே நிறுத்தி வெச்சிருக்காங்க...

அதே இடதில் உக்கிரமூர்த்தி சிலை இருக்கு. தவறாம பாருங்க.. பேருதான் உக்கிரர், ஆனால் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. அதைப் பார்த்துகிட்டே ரொம்ப நேரம் நின்னுட்டிருந்தேன். என்ன அழகா குன்றிலேயே செதுக்கி இருக்காங்க... அழகு அழகு கொள்ளையழகு

அதைக் கடந்து அடுத்த நிலைக்கு போனா அர்த்த மண்டபம் இருக்கு. அங்கிருந்து சில படிகளைக் கடந்தால் சுவாமி சன்னதிகள் இருக்கு. இடப்புறம், சத்தியகிரீஸ்வரர் லிங்கோத்பவரா இருக்கார். பிரம்மாவுக்கும் சன்னதி இருக்கு ஆனா சரியா பார்க்க முடியலை, மறைஞ்சு இருக்கு. நேராக மூன்று சன்னதிகள் இருக்கு. கற்பக விநாயகர், அம்மன், முருகன். முருகனோட தேவயானை, நாரதர், அகத்தியர், சூரிய, சந்திரர்கள் இருக்காங்க. முருகன் பெரிய வேல் வெச்சிருக்கார். இங்க அபிஷேகமெல்லாம் வேலுக்கு தானாம். இந்த மூணு சன்னதிகளிலும் குன்றிலேயே தெய்வ உருவங்களை செதுக்கியிருக்காங்க. ஒன்னொன்ணும் அவ்வளவு அழகு.

சன்னதிகளை விட்டு வெளியே வந்தால் கீழே இறங்க தனி வழி. அந்த வழியே இறங்கும்போது மேலும் பல சன்னதிகள் இருக்கு. குறிப்பா சனீஸ்வரருக்கு தனி சன்னதி இருக்கு.

கோவிலை விட்டு வெளியே வந்தால் கடைவீதியில் நிறைய கடைகள் இருக்கு. குறிப்பா எதை எடுத்தாலும் 20 ரூபாய்ன்னு போட்டு நிறைய கடைகள் இருக்கு. நேரமில்லாததினால் அங்க எல்லாம் போகலை.

குன்றுக்கு மேல் ஒரு கோவில் இருக்காம். ஆனால் ஆறு மணிக்கு மேலே ஆனதுனால எங்களை மேலே ஏற அனுமதிக்கலை.

அடுத்த பகுதிகளில் கள்ளழகர், பழமுதிர்ச்சோலை, திருவாதவூர், திருமோகூர் கோவில்களைப் பற்றி சொல்லுறேன்.

தொடரும்.........


முதல் பகுதி இங்க இருக்கு. இரண்டாவது இங்க இருக்கு.

Thursday, April 12, 2007

மனம் மயக்கும் கோவில்கள் - 2

முதல் பகுதி படிச்சிட்டீங்களா?

மீனாட்சி அம்மன் கோவிலில் நான் எடுத்த முக்குறுணி விநாயகர் படம். செல்பேசியில் எடுத்ததால் கொஞ்சம் மங்கலாக இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.... பெரிய உருவம்.

இதுல சிறப்பம்சம் என்னனா, இது ஒரே கல்லினால் ஆனதாம். நீங்க நேரில் பார்த்தீங்கன்னா இதோட பிரம்மாண்டம் உங்களுக்கு புரியும். விநாயகர் சதுர்த்தியின் போது 1000 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுமாம். கேட்கவே பிரமிப்பா இருக்கு...




கோவிலில் தவறாமல் பார்க்க வேண்டிய இன்னோரு இடம் ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளி சிலைகள். சொக்கநாதர் சன்னதிக்கு அருகில் இருக்கு. 4 பெரிய சிலைகள். முன்னாடி எல்லாம், வெண்ணை சாத்துறோம் பேர்வழின்னு மக்கள் வெண்ணை உருண்டைகளை சிலைகள் மேல் தூக்கி எறிவாங்க.. அதுனால 4 சிலைகளுமே வெண்ணை உருண்டைகளோட பயங்கரமா இருக்கும். இப்போ அதை தடை பண்ணிட்டாங்களாம். இப்போதான் அந்த சிலைகளோட முழு அழகும் தெரியுது. தடை விதிச்சவங்களுக்கு நன்றி.



அங்கே இருக்கும் இன்னோரு குறிப்பிட வேண்டிய விஷயம் பிரசவ சிலை. சொக்கநாதர் சன்னதிக்கு போகும் வழியில் ஒரு ஆஞ்சநேயர் சிலை தூணிலேயே இருக்கும். அதுக்கு செந்தூரம் தடவி ஆரஞ்சு கலரில் பார்த்தவுடனே பளிச்சுன்னு தெரியும். அதுக்கு எதிரே இன்னோரு தூணில் ஒரு பெண் பிரசவிக்கும் சிலை இருக்கு. கர்ப்பிணி பெண்கள் அதை வழிபட்டு அதுக்கு எண்ணை தடவினால், சுகப்பிரசவம் ஆகும்னு ஒரு ஐதீகமாம்.






கோவிலை விட்டு வெளியே வரும் வழியில், ஆயிரங்கால் மண்டபம் அருகே கயிறுகள், படங்கள், டாலர்கள், மணிகள், மரச் சாமான்கள் இதுபோல பலவும் விற்கும் கடைகள் ஏராளம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டமாக அந்த கடைகளில் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். கடைக்காரர்களுக்கு நல்ல வருமானம்னு நினைக்கிறேன்.







மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து திருப்பரங்குன்றம் போனோம். அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தொடரும்......

Wednesday, March 28, 2007

BCCI யில் ஆளெடுக்குறாங்கோ...


காலியிடங்கள் ::

1. கேப்டன் (BCCPC 0001) - ஒரு இடம்
2. கோச் (BCCPC 0002) - ஒரு இடம்
3. அணி வீரர்கள் (?!?) - 15 இடங்கள்

தகுதி ::

1. TV-ல் கிரிக்கெட் போட்டிகளை பார்த்திருக்க வேண்டும்
2. புத்தக கிரிக்கெட்டில் (அ) தெரு கிரிக்கெட்டில் குறைந்த பட்சம் 65 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்

3. மாடல்கள், விளம்பர நடிகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

4. கோச் பதவிக்கு LKG அல்லது UKG ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

தேர்வு முறை::

1. பேட்டிங் தேர்வு : பெர்மூடாவுடன் ஒரு தேர்வு போட்டி நடக்கும். போட்டியில் குறைந்தது 15 ரன்கள் எடுக்கவேண்டும்
2. பெளலிங் தேர்வு : ஒரு ஓவர் பந்து வீச வேண்டும். ( 3 வைட் / நோ பால்களுக்கு மேல் இருக்கக் கூடாது)


குறிப்பு :: கண்டிப்பாக தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும்.

விண்ணப்பங்களை உங்கள் பெயர்/பதவி/அதிக பட்ச ரன்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு callforcric@bcci.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

தேர்வு நடைபெறும் இடம் : நடேசன் பார்க், தி. நகர், சென்னை.
தேர்வு நாள் : 1 ஏப்ரல் 2007

முந்துங்கள்.... முந்துங்கள்..........

மேலதிக தகவல்களுக்கு கீழ்கண்ட புத்தகங்களைப் பார்க்கவும்

" நீங்களும் பேட்ஸ்மேன் ஆகலாம் "- எழுதியவர் முனாப் படேல்
"21 நாட்களில் கிரிக்கெட்" - எழுதியவர் "எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்" சித்து
"உங்கள் வீட்டை பாதுகாப்பது எப்படி" - எழுதியவர் தோனி


இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.........

Tuesday, March 27, 2007

ஒரு கூடை சன்லைட்


ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட்
ஒன்றாக சேர்ந்த கலர்தானே என் வொய்ட்

அப்பத்தா வெச்ச கறுப்பே
இப்பத்தான் செக்கச் சிவப்பே

எப்போதும் பச்சைத் தமிழன்..!
இப்போ நான் வெள்ளைத் தமிழன்..!

அட அட அட அசத்துது உன் ஸ்டைல்
நட நட நட நடப்பது உன் ஸ்டைல்
கட கட கட சிரிப்பது உன் ஸ்டைல்
பட பட பட பேசுவது உன் ஸ்டைல்

கலக்குது உன் ஸ்டைல்..... இழுக்குது உன் ஸ்டைல்
ஜெயிப்பது உன் ஸ்டைலே
குழந்தைக்கு உன் ஸ்டைல்.....இளசுக்கு உன் ஸ்டைல்
பெருசுக்கும் உன் ஸ்டைலே

சுட சுட சுட தொடுவது உன் ஸ்டைல்
தட தட தட அதிரடி உன் ஸ்டைல்
அடிக்கடி முடி கலைவது ஸ்டைலே
வர வர எல்லாமே ஸ்டைலே

ரகளை செய்யிற திரு வீரா
மிரள செய் மன்மத மாறா
கவிதேடும் கலகக்காரா
கண்தடவும் காந்தள மாரா
கிண்னென்ற கண்ணிய கூரா
திண்னென்ற வெள்ளைக்காரா

அடடா நீ கயத்தாடி மிட்டாய்
நடந்தாயே மறைகிற காற்றாய்
இருந்தாயே உருவத்தில் எட்டாய்
ஐஸ் நதியை நரம்புக்குள் விட்டாய்
ஜி என்னும் சொல்லிலே சுட்டாய்
ஈபிள் டவர் இதயத்தில் நட்டாய்
பட்டாசாய் பாட்டாய்

ஹீரோ ஹீரோ ஹீராதி ஹீரோ
ஸ்டாரோ ஸ்டாரோ நீ சூப்பர் ஸ்டாரோ

Monday, March 19, 2007

ஒரு சந்தேகம்

1. தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் குடுக்க கர்நாடகம் எதிர்ப்பு

2. முல்லை பெரியார் விஷயத்தில் தமிழ்நாட்டுக்கு கேரளம் எதிர்ப்பு

3. சேலம் ரயில்வே கோட்டம் அமைப்பதற்கு கேரளம் எதிர்ப்பு.

4. கடல் சார் பல்கலைகழகம் சென்னையில் அமைக்க மேற்கு வங்கம் எதிர்ப்பு..

என் சந்தேகம் என்னான்னா, இந்தியர்களின் சிறப்பம்சம் வேற்றுமையில் ஒற்றுமைன்னு(unity in diversity) சொல்லுறாங்களே அப்படீன்னா என்னங்க??? மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் அதுல சேராதா?

அதுதான் எனக்கு சத்தியமா புரிய மாட்டேங்குது. யாராவது அறிஞ்ச தெரிஞ்ச பெரியவங்க சொல்லுங்களேன்............

Tuesday, March 13, 2007

500 பதிவுகளுக்கும் மேல் பதிவிடுவது எப்படி?

தமிழ் வலையுலகின் மூத்த பதிவர் துளசி டீச்சர் அவர்களின் 500வது பதிவில், நான் அவங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டேன்.

// 500-ஆஆஆஆ!!!!!!!!!! பிரமிப்பா இருக்கு. எனக்கு ஒரு 10 பதிவுக்குள்ளயே, மூச்சு திணறிப்போச்சு. அந்த பத்து கூட சினிமா, புத்தகம், கட்டுரைன்னு ஜல்லியடிச்சிட்டு இருக்கேன். உங்களால எப்படி தான் முடிஞ்சதோ? அந்த ரகசியத்தை எனக்கும் கொஞ்சம் சொல்லிக்குடுங்களேன்? (இதெல்லாம் சொல்லிக்குடுத்து வர்ரதில்லைன்னு நீங்க சொல்லுறது கேக்குது)//

அதுக்கு டீச்சர் சார்பா க்ளாஸ் லீடர் இலவசக் கொத்தனார் பதில் சொல்லியிருந்தார்.

//கண்ணைத் திறந்து வெச்சுக்குங்க. உங்களைச் சுத்தி என்ன நடக்குதுன்னு பாருங்க. சுத்தி நடக்கற விஷயங்களில் கவனமா இருந்தீங்கன்னா பத்து பதிவென்ன, 500 பதிவே போடலாம்.//

யோசிச்சு பார்த்தா, இது ரொம்ப சரியான கருத்து. பதிவிடுவதற்கு விஷயமா இல்லை? எவ்வளவோ இருக்கு. நம்ம தான் விழிப்பா இருக்கணும். நம்மைச் சுற்றி என்ன நடக்குதுன்னு பார்த்து, மனசில பதிஞ்சுக்கணும். அதை அப்படியே நம்ம வலைப்பதிவுல வெளிப்படுத்தணும். இப்படி செய்தால், 500க்கும் மேலே பதிவுகள் போடலாம்.

இதை எல்லா புதிய வரவுகளுக்கும் தெரிவிக்கணும்னு தான் தனிப்பதிவா போட்டிருக்கேன். இந்த அருமையான பாடத்தை சொன்ன துளசி டீச்சருக்கும், அதை என்போன்ற புதியவர்களுக்கு எடுத்து சொன்ன க்ளாஸ் லீடர் கொத்தனாருக்கும் நன்றி, நன்றி நன்றி.



Tuesday, March 6, 2007

நீங்களும் ஓர் - ஒரு நிமிட சாதனையாளர்

திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் குமுதத்தில், "நீங்களும் ஓர் - ஒரு நிமிட சாதனையாளர்" என்ற தொடர் எழுதிவருகிறார். இந்த வாரம் தான் படிச்சேன். ரொம்ப நல்லா இருந்தது. இனிமேல் தொடர்ந்து தவறாமல் படிக்கணும்.

"The One Minute Manager" என்ற புத்தகம் படிச்சிருக்கீங்களா? அது ரொம்ப நல்லா இருக்கும். தமிழில் இப்படி ஒரு புத்தகம் இல்லையேன்னு நினைச்சிட்டிருந்தேன். திரு லேனாவின் இந்த முயற்சி அந்த குறையைப் போக்கும்ன்னு நினைக்கிறேன்.

திரு லேனாவின் இந்த வார கட்டுரை குமுத்திலிருந்து படிக்க இங்கே சொடுக்கவும்.

இதைப் படிக்க குமுதம் இணைய தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதற்கு கட்டணம் ஏதும் இல்லை. தவறாமல் படியுங்கள்.